ஆந்திராவில் பெற்ற மகளையே நரபலி கொடுத்த முயன்ற தந்தையை போலீசார் கைது செய்தனர்.
ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டம் ஆத்தூர் பகுதியை சேர்ந்தவர் வேணுகோபால். இவர் பொக்லைன் எந்திரம் வைத்து தொழில் செய்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் இரட்டை பிறவியில் பிறந்த 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இதில் ஒரு பெண் குழந்தைகள் பெயர் புணர்விகா (3).
கொரோனா காலத்தில் வேணுகோபாலுக்கு தொழில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் தனது உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் கடன் வாங்கியுள்ளார். மேலும் தொழிலில் தொடர்ந்து நஷ்டம் ஏற்பட்டு வந்ததால் வாங்கிய கடனை அடைக்க முடியாமல் இருந்துள்ளார்.
இந்நிலையில், தனது மகள்களில் ஒருவரை நரபலி கொடுத்தால் அனைத்து பிரச்சினைகளும் தீரும் என அவருக்கு தெரிந்த மந்திரவாதி ஒருவர் தெரிவித்துள்ளதை அடுத்து, நேற்றிரவு அதற்கான பூஜை ஏற்பாடுகள் நடந்துள்ளன. அப்போது சிறுமி மீது மஞ்சள் தண்ணீரை ஊற்றி, வாயில் குங்குமப் பொடியை வைத்து அடைத்துள்ளனர். இதனால் சிறுமிக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது.
மேலும் இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த சிறுமி கத்தி கூச்சலிட்டதால், அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து பெற்றோர்களிடமிருந்து சிறுமியை மீட்டு அருகிலிருந்த மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சிறுமியின் உடல்நிலை மோசமானதால் மேல்சிகிச்சைக்காக, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சிறுமி இன்று காலை பரிதாபமாக உயிரிழந்தார்.
இதைத்தொடர்ந்து, தந்தை வேணுகோபாலை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.